மேலும்

லசந்த படுகொலை – சரத் பொன்சேகாவிடம் நாளை மீண்டும் விசாரணை

sarath-fonsekaசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், மீண்டும் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தப் படுகொலையில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், கடந்த வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்து மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விசாரணைகளின் போது, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரின் நேரடி உத்தரவுகளைப் பெற்று, நீதிக்குப் புறம்பான செயல்களை மேற்கொள்ளும் தனியான குழுவொன்று சிறிலங்கா இராணுவத்தில் இயங்கியது என்பதை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்தினார்.

அதில் அவர், முன்னாள் அதிபரும், முன்னாள் பாதுகாப்புச் செயலருமே, லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு பொறுப்புக்கூற வேண்டும். போர் தொடர்பாக எமக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எனக்கும் இடையில் குரோதம் இருக்கவில்லை என்றும்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் நாளை மீண்டும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *