யாழ்ப்பாணத்திலும் ஏறுதழுவுதலுக்கு ஆதரவான போராட்டம் – ஒளிப்படங்கள்
தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு (ஜல்லிக்கட்டு) விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும், கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் போட்டிகளுக்கு தமிழ்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரியும், இதற்காக போராட்டம் நடத்தம் தமிழ்நாட்டு உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் ஏறுதழுவுதலுக்கு ஆதரவான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இளைஞர்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர்.
சமூக ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் நன்றியுடன் – சபேஸ்