கொழும்பில் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.
கொழும்பு நகரம் மற்றும் நாடாளுமன்றத்தை அண்டிய பகுதிகளில் அண்மையில் அதிகரித்துள்ள ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளால், வாகனப் போக்குவரத்துகள் பாதிக்கப்படுகின்றன.
இந்த நிலையிலேயே, இத்தகைய போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக, ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான இரண்டு இடங்களை வர்த்தமானி மூலம் அறிவிக்க சட்டம் ஒழுங்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு, அமைச்சர் சாகல ரத்நாயக்க, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர் ஜெகத் ஜெயவீரவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர், குறிப்பிட்ட இடங்களில் மாத்திரமே எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து, அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் கடந்த 13ஆம் நாள் காவல்துறை அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போதும் ஆராயப்பட்டுள்ளது.