அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத் திட்டத்தில் சீனத் தூதுவருக்கும் அதிருப்தியாம்
அம்பாந்தோட்டை கைத்தொழில் வலய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விடயத்தில், சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்கும் கவலை வெளியிட்டார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சீனத் தூதுவருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், நேற்று கீச்சகத்தில், கேள்வி பதில் நிகழ்வு ஒன்றில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.
இதன்போது, சிறிலங்காவில் சீனாவின் தலையீட்டுக்கு மகிந்த ஆதரவு அணியினர் எதிர்ப்பு வெளியிட்டு வருவது குறித்து சீனத் தூதுவர் அதிருப்தி வெளியிட்டதாக வெளியான செய்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச “இல்லை, திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து, சீனத் தூதுவரும் கவலை கொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனத் தூதுவருடனான சந்திப்பு மிகவும் சுமுகமாக இடம்பெற்றதாகவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிராக மேற்கு நாடுகள் தீர்மானங்களைக் கொண்டு வந்த பின்னரும், சீனா எப்போதும், எம்முடனேயே நின்றது. என்றும் கீச்சக கேள்வி பதிலில் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.