எட்கா உடன்பாடு குறித்த மூன்றாவது கட்டப் பேச்சு கொழும்பில்
எட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக, இந்தியா, சிறிலங்கா இடையிலான மூன்றாவது கட்டப் பேச்சு வரும் 2017 ஜனவரி 4ஆம், 5ஆம் நாள்களில் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்கா உடன்பாடு குறித்து இந்திய- சிறிலங்கா தரப்புகளுக்கு இடையில் முதலாவது கட்டப் பேச்சு கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெற்றது.
இதையடுத்து, புதுடெல்லியில் இரண்டாவது கட்டப் பேச்சு செப்ரெம்பர் மாதம் நடந்தது.
இந்தப் பேச்சுக்களில் இந்தியாவின் மத்திய வர்த்தக, கைத்தொழில் இணையமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையிலேயே மூன்றாவது கட்டப் பேச்சு மீண்டும் கொழும்பில் ஜனவரி 4ஆம், 5ஆம் நாள்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான எட்கா உடன்பாட்டை, 2016 டிசெம்பர் மாதத்துக்குள் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
எனினும் இந்தியத் தரப்பு இந்த உடன்பாட்டை செய்து கொள்வதில் அவசரம்காட்டவில்லை. 2017 மே மாதத்துக்குள் எட்கா உடன்பாட்டைச் செய்து கொள்ளும் திட்டத்திலேயே இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.