புதிய ஆண்டில் மைத்திரி- ரணில் கூட்டு அரசை கவிழ்ப்பேன் – மகிந்த சூளுரை
புதிய ஆண்டில் மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலக்கு என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று தனது இல்லத்தில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“தற்போதைய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும் கூட, தற்போதைய அரசியல் சூழலையில் எதிர்காலத்தில் எல்லாவற்றையுமே மாற்றியமைக்க முடியும்.
கூட்டு அரசாங்கத்தில் உள்ள இரண்டு கட்சிகளுக்குள்ளேயும் பிளவுகள் உள்ளன. இதுபோன்று அரசாங்கத்துக்குள் பிளவுகள் இருக்கும் நிலையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.
சிறிலங்காவின் அதிபராக வரும் எண்ணம் எனக்கு இல்லை. அதிபராக இல்லாமலேயே என்னால் நாட்டை ஆட்சி செய்ய முடியும்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன என்னைப் பிரதமராக நியமித்தால், அவருக்குக் கீழ் பணியாற்ற முடியும்.
ரணில் விக்கிரமசிங்க அவருக்குக் கீழ் பிரதமராகப் பணியாற்றும் போது, என்னாலும் அது சாத்தியமே. சிறிலங்கா அதிபரை 1970இல் இருந்தே எனக்குத் தெரியும்.
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டு தனித்தனியாகப் போட்டியிட்டால் ஐதேகவே ஆதாயமடையும் என்பது தவறு.
ஐதேகவின் கணிசமான ஆதரவாளர்கள் வாக்களிக்கமாட்டார்கள். அவர்கள் அரசாங்கம் தொடர்பாக மகிழ்ச்சியாக இல்லை.
பிரபாகரனைத் தோற்கடிப்பேன் என்று நான் கூறியது போலவே அதனை செய்தேன்.
அதுபோலவே, 2017ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.