வரும் மே 12இல் சிறிலங்காவில் ஐ.நா வெசாக் நாள் நிகழ்வு – மோடியும் பங்கேற்கிறார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும், ஐ.நா வெசாக் நாள் நிகழ்வுகள் அடுத்த ஆண்டு மே 12ஆம் நாள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் என்று, சிறிலங்காவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.
ஐ.நா வெசாக் நாள் அதிகாரபூர்வ நிகழ்வுகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, கண்டியில் மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை, சிறிலங்காவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நேற்று சந்தித்தார்.
இதற்குப் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறிலங்காவில் நடத்தப்படவுள்ள ஐ.நா வெசாக் நாள் நிகழ்வுகள் தொடர்பாக இரண்டு மகாநாயக்கர்களிடமும் விளக்கமளித்துள்ளேன்.
கொழும்பில் அடுத்த ஆண்டு மே 12ஆம் நாள் நடக்கவுள்ள ஐ.நா வெசாக் நாள் நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராகப் பங்கேற்பார்.
இந்த நிகழ்வில் உலகின் பல நாடுகளில் இருந்தும், அரசியல் மற்றும் பௌத்த மதத் தலைவர்களை உள்ளடக்கிய 2000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
நாடாளுமன்ற வளாகம் அருகே, தியவன்ன ஓயாவில் அமைக்கப்படும் சிறப்பு வெசாக் வலயத்தில் தொடக்க நிகழ்வுகள் இடம்பெறும். கண்டியில் இந்த நிகழ்வுகள் நிறைவடையும்.
ஐ.நா வெசாக் நாள் நிகழ்வு, பௌத்த நாடுகளில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறை சிறிலங்காவுக்கு இந்த வாய்ப்புக் கிடைக்கவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.