அம்பாந்தோட்டை சிறப்பு பொருளாதார வலயம் – இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவுடன் உடன்பாடு
அம்பாந்தோட்டை சிறப்பு பொருளாதார வலயம் தொடர்பாக சீனாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
“சீனாவின் இந்த சிறப்பு பொருளாதார வலயத் திட்டம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும்.
ஆரம்பக் கட்டத்தில் 4 இலட்சம் பேருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
இந்தப் பொருளாதார வலயத்தில் 2400 திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் நம்புகிறது.
இங்கு சிறிலங்கா மற்றும் சீனாவினால் இந்த பொருளாதார வலயம் நிர்வகிக்கப்பட்டாலும், சீன முதலீட்டாளர்களுக்கு மாத்திரம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. ஏனைய முதலீட்டாளர்களுக்கும் கூட இது திறந்து விடப்படும்” என்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அண்டிய 15 சதுர கி.மீ பிரதேசத்தில் சுமார் 8 பில்லியன் டொலர் முதலீடுகளைச் செய்யும் சில தொழிற்சாலைகளை அமைக்க சீனா விருப்பம் வெளியிட்டுள்ளதாக சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இயற்கை எரிவாயு மின்நிலையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், சீமெந்து ஆலை, கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளம், உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதற்கே சீனா விருப்பம் வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.