மேலும்

மகிந்தவை மீண்டும் பதவிக்குக் கொண்டு வர முயற்சி – ஊடகங்கள் மீது பாய்கிறார் ரணில்

ranilமகிந்த ராஜபக்சவை மீண்டும் பதவிக்குக் கொண்டு வரும் நோக்கில் சில அச்சு ஊடகங்கள் செயற்பட்டு வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

கண்டியில் நேற்று ஐதேக உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ராஜபக்ச ஆட்சியில் இருந்த காலத்தில்,  நன்மைகளை அனுபவித்த ஊடக  வியலாளர்கள், அவரை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ரணில் குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகச் செயற்படும் ஊடகங்கள் என்று டெய்லி மிரர் மற்றும் பினான்சியல் ரைம்ஸ் ஆகிய ஆங்கில நாளிதழ்களின் பெயர்களையும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து அகற்றுமாறு டெய்லி மிரர் கோருவதாகவும்,  அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவத்தைச் சீரழிக்க பினான்சியல் ரைம்ஸ் முற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

‘ஊடகங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது குறித்து பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைச் செய்யுங்கள். ஆனால் முரடர்களை மீண்டும் அழைப்பதற்கு முயற்சிக்காதீர்கள்.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்காக இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அவர்கள் முயற்சித்தால்,  அதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம்.

அவர்கள் பாத யாத்திரை போகட்டும். நாமும் தயார். வீதியில் மக்களை இறக்குவதற்கு எம்மாலும் முடியும்” என்றும் சிறிலங்கா பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *