மேலும்

யாழ்.பல்கலைக்கழக மோதல் குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய விசாரணைக்குழு

prof.vasanthi arasaratnamயாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, சிங்கள அதிகாரி ஒருவர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

“யாழ். பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு  மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் உயர் பதவிவகிக்கும் சிங்கள அதிகாரி ஒருவர் இந்தக் குழுவின் தலைவராக இருப்பார். ஏனைய இருவரும் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழர்களாவர்.

இந்தக் குழுவினர் நடத்தும் விசாரணைகளுக்கு அமைய மோதல்களைத் தூண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளை முதல் படிப்படியாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும். நாளை மருத்துவ பீடத்தின் சித்தமருத்துவ பிரிவின் பயிற்சிகளும், விஞ்ஞானபீடம் மற்றும் மருத்துவ பீடங்களின் பரீட்சைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாணவர்கள் தயக்கமின்றி கல்விச் செயற்பாடுகளில் வந்து பங்கேற்கலாம். ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.

இவ்வாறானதொரு சம்பவம் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உறுதிமொழி அளித்துள்ளனர்.

இரு மாணவக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்றது சிறியதொரு சம்பவம். இதனை இனரீதியான மோதலாக சித்தரிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது.

இதுபோன்ற சிறிய சம்பவங்கள் கடந்த காலத்திலும் இடம்பெற்றுள்ளன. சம்பவ தினத்தன்று ஒரு மணித்தியாலத்துக்குள் நிலைமையை சுமுகமாக்க முடிந்தது.

இருந்தபோதும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே தற்காலிகமாக பல்கலைக்கழகத்தை மூட தீர்மானித்திருந்தோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *