சாத்தியமான எல்லா வழிகளிலும் சிறிலங்காவுக்கு உதவுவோம் – என்கிறது சீனா
சாத்தியமான எல்லா வழிகளிலும் சிறிலங்காவுக்கு சீனா உதவியளிக்கும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான அதிகாரி வாங் யிங்கி உறுதியளித்துள்ளார்.
தம்புள்ளவில் உள்ள விடுதிகள் பயிற்சி பாடசாலையில், சீன மொழி பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா, சீனாவின் நெருங்கிய நண்பன், சிறிலங்காவின் அபிவிருத்தியில் சீனா முழுமையாக தொடர்புபட்டுள்ளது.
உதவிகள் தேவைப்படும் போது, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்றும்.” என்று தெரிவித்தார்.
சிறிலங்காவுக்கு அதிகளவில் வரும் சீன சுற்றுலாப் பயணிகள், விடுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களில் மொழிப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, சீன மொழிப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, சீனாவுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.