மட்டக்களப்பு விமான நிலையத்தை திறந்து வைத்தார் சிறிலங்கா அதிபர்
புனரமைப்புச் செய்யப்பட்ட மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையத்தின் ஓடுபாதையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பயணம் செய்த விமானப்படையின், எம்.ஏ-60 விமானம் இன்று காலை புனரமைக்கப்பட்ட ஓடுபாதையில் முதன்முதலாக தரையிறங்கியது.
மட்டக்களப்பு விமானப்படைத் தளத்தின் ஓடுதளத்தை, 1070 மீற்றரில் இருந்து, 1560 மீற்றராக விரிவாக்கும் புனரமைப்புப் பணிகள் கடந்த 2012ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர், சிறிலங்கா விமானப்படையினரால் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
1143 மில்லியன் ரூபா செலவில் ஓடுபாதை புனரமைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் முனைய கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.
தற்போது மட்டக்களப்பு விமான நிலையம் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் நிர்வகிக்கப்படுகிறது.