இந்திய எதிர்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் போர் விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா
சிறிலங்கா விமானப்படைக்கு பாகிஸ்தானிடம் இருந்து பத்து ஜே.எவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, விரைவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கொள்வனவு உடன்பாடு குறித்த பேரங்களைக் கையாள்வதற்காக, பிரிகேடியர் முகமட் பசீர் என்ற இராணுவ அதிகாரியை, பாகிஸ்தான் அரசாங்கம் கொழும்பில் தங்க வைத்துள்ளது.
இந்த விமானக் கொள்வனவு உடன்பாட்டில் நிதி ஏற்பாடுகள் குறித்த விடயமும் உள்ளடங்கியிருப்பதாகவும், இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டதும், 2017ஆம் ஆண்டு ஜே.எவ்-17 போர் விமானங்கள் சிறிலங்கா விமானப்படைக்கு விநியோகிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இந்த உடன்பாடு கையெழுத்திடப்படுவதாக இருந்தது.
தலா 35 மில்லியன் டொலர் பெறுமதியான 10 ஜே.எவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் இந்த உடன்பாட்டை, பாகிஸ்தான் கடன் திட்டத்தின் கீழ் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இந்தியாவின் எதிர்ப்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாக இந்த திட்டத்தை சிற்லங்கா அரசாங்கம் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.