இன்று மாலை மங்கள சமரவீரவை சந்தித்துப் பேசுகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்
மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா வரவுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இன்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இன்று தொடக்கம் எதிர்வரும் 10ஆம் நாள் வரை சிறிலங்காவின் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறப்பு விமானத்தில் கொழும்பு வரும், அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேரில் சென்று வரவேற்பார்.
இதையடுத்து, இன்று பிற்பகல் 5.30 மணியளவில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில், சின, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகும்.
சுமார் ஒரு மணிநேரம் இடம்பெறவுள்ள இந்தப் பேச்சுக்களை அடுத்து, மாலை 6.30 மணியளவில், சீன வெளிவிவகார அமைச்சரும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரும், கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்.
அதேவேளை சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரையும், சீன வெளிவிவகார அமைச்சர், தனித்தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளார்.