போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் – மங்கள சமரவீர
போரின் இறுதிக்கட்டத்தி்ல் சிறிலங்கா இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, உண்மை கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
‘போருடன் தொடர்புடைய எந்தக் குற்றச்சாட்டையும், சிறிலங்கா அரசாங்கம் கண்மூடித்தனமாக நிராகரிக்காது. அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்தும்.
சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினருடனும் கலந்துரையாடி, இந்த உண்மை கண்டறியும் ஆணைக்குழு இந்த ஆண்டு இறுதியில் உருவாக்கப்படும்.
இந்த ஆணைக்குழு, இராணுவக் கட்டளைப்பீடத்தின் உத்தரவுகளே, மனித உரிமை மீறல்களுக்கு காரணமாகியதா என்று விசாரணை நடத்தப்படும்.
சிறிலங்கா இராணுவத்தினர் உலகளவில் கௌரவமானவர்களாக கண்ணியமானவர்களாக மதிக்கப்படும் நிலையில் இருக்கின்றனர். எமது இராணுவத்தினர் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அதிகாரம் உள்ளவர்களின் தேவைகளுக்காகவே அவ்வாறு செயற்பட்டிருப்பர்.
அவர்களுக்கு இந்த உத்தரவுகளை வழங்கியது யார் என்று கண்டறியப்பட வேண்டியது முக்கியம். குற்றத்தில் ஈடுபடுவோரை விட குற்றம் செய்ய தூண்டுபவர்களே பெரிய குற்றவாளிகள். அவர்களையே முதலில் தண்டிக்க வேண்டும்.
நாட்டின் பெயரைக் களங்கப்படுத்தும் வகையில், யார் குற்றம் புரிந்திருந்தாலும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.
இராணுவத்தினரோ, அரசியல்வாதிகளோ அல்லது வேறு நபர்களோ நாட்டுக்கு எதிராக குற்றம் புரிந்திருந்தால் நாட்டின் பாதுகாப்புக் கருதி கட்டாயம் தண்டனை பெற்று கொடுக்கப்படும்.
இறுதிக் கட்டப் போரில், 40 ஆயிரம் பேர் இறந்தார்கள் என குற்றச்சாட்டே முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் உண்மை நிலையை ஆராய வேண்டும். இதன்பின்னரே இது பற்றி விளக்க முடியும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.