வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜோர்ஜ் மாஸ்டர்
விடுதலைப் புலிகள் அரசியல்துறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய ஜோர்ஸ் மாஸ்டருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கை, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக பல்வேறு பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்ற, ஜோர்ஸ் மாஸ்டருக்கு எதிராக 2009ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து ஜோர்ஸ் மாஸ்டரை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் விடுத்திருந்த பரிந்துரையின் பேரிலேயே, அவருக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து, விடுதலை செய்வதாக கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டார்.
அதேவேளை, இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தொடர்பான விசாரணையை கொழும்பு பிரதம நீதிவான் டிசெம்பர் 5ஆம் நாளுக்கு ஒத்திவைத்துள்ளார்.
ஜோர்ஜ் மாஸ்டர் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.