மேலும்

சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த தெலங்கானா மாநிலம் அக்கறை

rajiv-sharmaசிறிலங்கா உள்ளிட்ட அயல் நாடுகளுடன், சுற்றுலா, சுகாதாரம், சமூகத் துறைகளில், உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக இந்தியாவின் தெலங்கானா மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இருந்து சென்றிருந்த 15 ஊடகவியலாளர்களை கடந்த வெள்ளிக்கிழமை, ஹைதராபாத்தில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் சந்தித்த, தெலங்கானா மாநில தலைமைச் செயலர் ராஜீவ் சர்மா இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கும் தெலங்கானாவுக்கும் இடையில் இருந்த பாரம்பரிய கலாசாரத் தொடர்புகள் குறித்தும், பாதுகாப்பு. விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொழில்துறை கேந்திரமாக விளங்கும் தெலங்கானா மாநிலத்தின் சிறப்புகள் குறித்தும், இந்தச் சந்திப்பின் போது, மாநில தலைமைச்செயலர் விளக்கமளித்திருந்தார்.

சிறிலங்காவுடன், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளையும், உறவுகளையும் வலுப்படுத்திக் கொள்ள தெலங்கானா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தெலங்கானா மாநிலம் அண்மையில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை பீஜிங்கில் அண்மையில் சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இதன்போது, சந்திரபாபு நாயுடுவை சிறிலங்கா வருமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சார்பில், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அழைப்பு விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *