கொழும்புத் துறைமுகத்தில் அவுஸ்ரேலியப் போர்க்கப்பல்
அவுஸ்ரேலியக் கடற்படையின் எச்.எம்.ஏ.எஸ்.பேர்த் என்ற ஏவுகணைப் போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்தில் அவுஸ்ரேலியப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தப் போர்க்கப்பலில் 192 மாலுமிகள் உள்ளனர்.
எதிர்வரும் 23ஆம் நாள் வரை இந்தப் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் தரித்து நிற்கும் போது, அவுஸ்ரேலியப் போர்க்கப்பலின் மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினருடனான உறவுகளை வலுப்படுத்தும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளனர்.
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயத்தில் சிறிலங்காவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.