வல்வெட்டித்துறை கடற்பரப்பில் சிறிலங்கா விமானப்படையின் கடல்-வான் மீட்பு ஒத்திகை
வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து சிறிலங்கா விமானப்படை, நேற்றுக்காலை கடல்-வான் மீட்பு ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது.
ஹிங்குராகொடவை தளமாக கொண்ட சிறிலங்கா விமானப்படையின், 7ஆவது உலங்குவானூர்தி அணியினால், மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையில், சிறிலங்கா விமானப்படையின் சிறப்புப் படைப்பிரிவு, விமானிகள், சுடுனர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் பங்கெடுத்தனர்.
மீட்புப் பணிக்கான உயிர்காப்பு வீரர்கள் மற்றும் படகுகளை சிறிலங்கா கடற்படை வழங்கியிருந்தது.
கடலில் ஆபத்தை எதிர்கொள்பவர்களை மீட்பதற்கான வழிகாட்டு முறைகளைக் கொண்ட இந்த ஒத்திகை சிறிலங்கா படையினருக்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
பலாலி விமானப்படைத் தள கட்டளை அதிகாரி, குறூப் கப்டன் எஸ்.டி.ஜி.எம்.சில்வா மற்றும் 7ஆவது உலங்குவானூர்தி அணியின் கட்டளை அதிகாரி விங் கொமாண்டர் தனிப்புலியாராச்சி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது. கடலில் தத்தளித்தவர்கள், சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டு, வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் கொண்டு வந்து தரையிறக்கப்பட்டு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
பெருமயளவிலான மக்களும், மாணவர்களும் இந்த ஒத்திகையை வேடிக்கை பார்த்தனர்.