மைத்திரியுடனான சந்திப்பு – மீனவர்கள் பிரச்சினைக்கே முக்கியத்துவம் அளித்தார் மோடி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று நடந்த இருதரப்புப் பேச்சுக்களில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக புதுடெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் பயணமாக நேற்று பிற்பகல் புதுடெல்லி சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்று மாலை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இராப்போசன விருந்தளித்தார்.
இதன் போது இருநாடுகளின் தலைவர்களும், இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இந்தப் பேச்சுக்களின் போது, மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணும் வகையில் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை, இந்தியப் பிரதமர் வலியுறுத்திக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பிரதானமான எல்லாப் பிரச்சினைகள் தொடர்பாகவும், சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மீனவர்கள் பிரச்சினை, சிறிலங்காவில் இந்தியாவினால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு பொருளாதாரத் திட்டங்களின் நிலை, முதலீடு மற்றும் வர்த்தகத்தை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்காவில் உள்ள மக்கள் அனைவரும், சமத்துவமாகவும், கௌரவமாகவும் வாழுவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் இந்தியப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு குறித்து ருவிட்டரில், பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, “இந்திய-சிறிலங்கா உறவு மிகவும் சிறப்பானது. இனி வரும் காலத்தில் இந்த உறவு மேலும் வலுப்படும்.”
“உஜ்ஜெயின் கும்பமேளாவில் சிறிசேன பங்கேற்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா-சிறிலங்கா இடையே சமூக பண்பாட்டு உறவு எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை இது வெளிக்காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இன்று உஜ்ஜெயின் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அங்கிருந்து சாஞ்சிக்குச் செல்வார். அதன் பின்னர் பெங்களூரு சென்று, அங்கிருந்து விமான மூலம் இன்று மாலை கொழும்பு திரும்பவுள்ளார்.