பாலம் அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேசவில்லை – சிறிலங்கா
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் எந்தப் பேச்சுக்களும் நடத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசாங்க பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முறைசார் அல்லது முறைசாரா பேச்சுக்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்தியாவுடன் இதுபற்றிய பேச்சுக்கள் எதற்கும் நாம் செல்லவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளதாக சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக சிறிலங்காவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக, இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், இன்னமும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், இந்தியாவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.