சிறிலங்கா பிரதமருடன் சம்பந்தன் சந்திப்பு – காணிகள் விடுவிப்பு, கைதுகள் குறித்து பேச்சு
இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல் மற்றும் வடக்கு, கிழக்கில் திடீரென அதிகரித்துள்ள கைதுகள் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பேச்சு நடத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில், இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பில், பரவிப்பாஞ்சான் பிரதேசத்துக்கு, இரா.சம்பந்தன் சென்றமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள், அப்பகுதி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
சிறிலங்கா இராணுவம் நிலைகொண்டிருக்கின்ற அந்தப் பகுதி, பொது மக்களுக்கு சொந்தமான பகுதியென்பதாலும், அங்கு அவர்களின் வீடுகள் இருப்பதாலும், எஞ்சியுள்ள 54 குடும்பங்களையும் மீளக்குடியேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சிறிலங்கா பிரதமரிடம், இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தாம் கவனத்தில் கொள்வதாக உறுதியளித்த சிறிலங்கா பிரதமர், பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்பாக அறிக்கை கோரவுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.