தாஜுதீன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளருக்கு விளக்கமறியல்
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா காவல்துறை ஆய்வாளரை, மே 5ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
தாஜுதீன் கொலை தொடர்பாக தகவல்களை மறைத்து, விசாரணைகளைத் திசை திருப்பிய குற்றச்சாட்டிலேயே, காவல்துறை ஆய்வாளரான சுமித் சம்பிக்க நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
இவர், நாரஹேன்பிட்டிய காவல்நிலையத்தின் குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாக முன்னர் பணியாற்றியவராவார்.
இவரை இன்று கொழும்பு மேலதிக நீதிவான் முன் நிறுத்திய போதே, அடுத்த மாதம் 5ஆம் நாள் வரை தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தக் கொலை தொடர்பாக, மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.