சம்பூர் அனல் மின் திட்டம் குறித்து பேசுவதற்கு கூட்டமைப்பு கோரவில்லை – சிறிலங்கா அரசாங்கம்
சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சம்பூர் அனல் மின் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் பேசப் போவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பது தொடர்பாக, கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில், பிரதி மின்சக்தி அமைச்சர் அஜித் பெரேரா, கருத்து வெளியிட்டார்.
“இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் கலந்துரையாடவில்லை. இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த கட்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், எம்முடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை எதையும் விடுக்கவில்லை.
2017இல் சம்பூர் அனல் மின் திட்டம் நிறைவடையும் என்று இனிமேலும் நாம் எதிர்பார்த்திருக்க முடியாது.
2018ஆம் ஆண்டு ஏற்படவுள்ள பாரிய மின் தட்டுப்பாட்டு நெருக்கடியைச் சமாளிக்க, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதுப்பிக்கத்தக்க வளங்களைக் கொண்டு மின்சக்தி உற்பத்தியை ஆரம்பிக்க வேண்டும்.
நாட்டின் தற்போதைய அபிவிருத்தி வளர்ச்சியின் அடிப்படையில், 2018ஆம் ஆண்டு, மேலதிகமாக 100 மெகாவாட், மின்சாரம் தேவைப்படும் என்று மின்சார சபை கணிப்பிட்டுள்ளது.
சம்பூர் அனல் மின் நிலையம் தாமதமாவதால், இந்த நெருக்கடியைக் சமாளிக்க, மூன்று சூரியசக்தி மின் நிலையங்களையும், மன்னாரில் ஒரு காற்றாலை மின் நிலையத்தையும், ஒரு திரவ எரிவாயு மின் நிலையத்தையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.