சிகிச்சைக்காகவே அமெரிக்கா சென்றாராம் கோத்தா
மருத்துவ சிகிச்சைக்காக தாம் வெளிநாடு சென்றிருப்பதால், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு முன்பாக இன்று முன்னிலையாக முடியவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படை விமானங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக, கோத்தாபய ராஜபக்ச இன்று அதிபர் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அமெரிக்கா சென்றுள்ளதால் கோத்தாபய ராஜபக்ச இன்று ஆணைக்குழு முன் விசாரணைக்கு வரவில்லை.
எனினும், தாம் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், விசாரணைக்க வரமுடியவில்லை என்றும் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக, ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் நாடு திரும்பியதும், விசாரணைக்கான புதிய நாள் அறிவிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.