மேலும்

மகிந்தவும், கோத்தாவுமே புலிகளின் இலக்காம்- தயான் ஜெயதிலக கண்டுபிடிப்பு

Dayan-Jayatillekaமகிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவுமே புலிகளின் இலக்காக இருப்பர் என்று, சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியும், மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர்களில் ஒருவருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும், தெரிவித்திருப்பதாவது,

“தற்கொலை அங்கி கண்டுபிடிப்பு தொடர்பான சம்பவத்தை அனைத்துலக அனுபவங்கள், நடப்புகள் மூலம் நோக்கும்போது ஒரு விடயத்தை குறிப்பிடலாம். பிரபலமான பயங்கரவாத இயக்கமொன்று தோல்வி கண்ட பின்னர் முன்பிருந்த பெயரிலோ வேறு பெயரிலோ தலைதூக்கலாம்.

இதற்கு சிறந்த உதாரணம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பாகும். பல ஆண்டுகளுக்கு முன்னர், இந்த இயக்கம் வட ஆபிரிக்காவில் அல்கைதா அமைப்பாக செயற்பட்டது. இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பாக மாறியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்வியை கண்டது. ஆனால் அதிலிருந்து தப்பிச் சென்ற பெரும்பாலானோர் மேற்கத்தேய நாடுகளிலும், தென்னிந்தியாவிலும் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் புலிகளாக செயற்படாமல் இருக்கலாம்.

ஆனால் அனைத்துலக புலிகளின் வலைப்பின்னலில் இணைந்திருந்தவர்கள், மீண்டும் புலிகளின் செயற்பாடுகள் தலைதூக்க இடமுள்ளது.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வடக்கு, கிழக்கில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. எனவே புலிகள் தலைதூக்க முடியாமல் போனது.

அந்த பிரதேசங்களில் படையினர் மற்றும் உளவுப் பிரிவினர் அதிகம் மக்களுடன் மக்களாக இருந்தனர். எனவே புலிகள் முயற்சித்தாலும் அவர்களால் தலைதூக்க முடியவில்லை.

ஆனால் புதிய அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கின் பாதுகாப்பில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. குழப்பகரமான சூழ்நிலை தலைதூக்கியுள்ளது. இந்த ஓட்டை ஊடாகவே சாவகச்சேரி, மன்னார் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

ஒருபிரிவினர் இதன்மூலம் புலிகளின் பயங்கரவாத தாக்குதலொன்றுக்கு தயாராவது புலப்படுகின்றது. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

அனைத்துலக ரீதியிலும் தமிழ் நாட்டில் எஞ்சியுள்ள புலிகள் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கும். இதனை ஆழமாக ஆராய்ந்தால் புலிகளின் இலக்கு அரச தரப்பில் எவரையும் இலக்கு வைத்ததாக அமையாது.

மேற்கத்தேய நாடுகளின் நண்பனான அரசின் மீது தாக்குதல் நடத்தினால் மேற்குலத்தின் கடும் போக்கிற்கு ஆளாகலாம் என்பதை புலிகள் அறிவார்கள். எனவே இதற்கு புலிகள் தயாராகமாட்டார்கள்.

இதனால் புலிகளின் இலக்கு மகிந்த ராஜபக்சவும் கோத்தாபய ராஜபக்சவாகவுமே இருக்கும். இதனை வெற்றிகரமாகா நிறைவேற்றினால் புலம்பெயர் புலிகள் மகிழ்ச்சியடைவார்கள்”  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *