கண்ட மேடைக்கு உரிமை கோரும் சிறிலங்காவுக்கு பங்களாதேஸ் எதிர்ப்பு
தனது கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவுக்கு அப்பாலுள்ள கண்டமேடைக்கு உரிமை கோரும் சிறிலங்காவின் செயலுக்கு பங்களாதேஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
200 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள கண்டமேடைக்கு உரிமை கோரும் வகையில்,சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவிடம் எல்லையை வரையறுக்க கோரியுள்ளது. சிறிலங்காவின் இந்த உரிமை கோரலுக்கு பங்களாதேஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தமது நாட்டின் கண்டமேடைப் பகுதிக்குள் அதன் ஒரு பகுதி வருவதாக பங்களாதேஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஐ.நா பிரகடனத்தின் படி, ஒரு நாட்டின் கடல் எல்லையில் இருந்து 350 கடல் மைல் தொலைவு வரைக்குமே, கண்டமேடைக்காக உரிமை கோர முடியும் என்றும், ஆனால் சிறிலங்கா 1000 கடல் மைலுக்கு அப்பால் உள்ள பகுதிக்கு உரிமை கோரியிருப்பதாக பங்களாதேஸ் தெரிவித்துள்ளது.
இது பங்களாதேசின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், சிறிலங்காவின் உரிமை கோரலை தமது நாடு தடுக்கும் என்றும் பங்களாதேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பங்களாதேசுடன் சமரசம் செய்து கொள்ள சிறிலங்கா முயற்சித்த போதிலும் அதற்கு அந்த நாடு இணங்கவில்லை.
சிறிலங்கா உரிமை கோரும் கண்ட மேடைப்பகுதி இந்தியாவின் கடல் எல்லைக்குள்ளேயும் வருவதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவின் இந்த உரிமை கோரலை இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளும் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஶ்ரீலங்கா கடல் எல்லை கடந்தும் தனது ஆதிக்கத்தை செலுத்த முற்படுவதை பாராட்டுகிறேன். அங்கேயும் ஒரு 100 அடி உயர புத்தர் சிலையைக் கட்டிவிடும் நன்னாளைக் காண விளைகிறேன்.