ஜப்பானிய – சிறிலங்கா கடற்படைகள் அடுத்த மாதம் கூட்டுப் பயிற்சி
ஜப்பானிய கடற்படையும், சிறிலங்கா கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படையும் இணைந்து, கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொள்ளவுள்ளன.
தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சி அடுத்த மாதம், 10ஆம் நாள் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, ஜப்பானிய கடற்படையின் இரண்டு பி-3சி கடல் கண்காணிப்பு விமானங்கள் சிறிலங்கா வரவுள்ளன.
ஜப்பானியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகம் வரும் போது நடத்தப்படும் கூட்டு பயிற்சிகள் மூலம், ஜப்பானியக் கடற்படைக்கும், சிறிலங்கா கடற்படைக்கும் இடையில் ஒத்துழைப்பு இப்போது வலுப்படுத்தப்பட்டுள்ளது,
கொழும்புத் துறைமுகத்துக்கு ஜப்பானியக் கடற்படைப் போர்க்கப்பல்கள் இப்போது தொடர்ச்சியாக வந்து செல்கின்றன.
சோமாலியக் கடற்பரப்பில் கடற்கொள்ளையில் இருந்து கப்பல்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்குச் செல்லும் போதும் அங்கிருந்து நாடு திரும்பும் வழியிலும் ஜப்பானியப் போர்க்கப்பல்கள் கொழும்பு வந்து செல்கின்றன.
கடந்த திங்கட்கிழமை சுசுனாமி மற்றும் மகிநாமி ஆகிய இரண்டு ஜப்பானியப் போர்க்கப்பல்கள் கொழும்பு வந்திருந்தன.
ஜப்பானியப் போர்க்கப்பல்கள் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வது இது 58ஆவது தடவையாகும்.