மேலும்

சீனா அமைக்கும் துறைமுக நகருக்கு சிறப்பு மாவட்ட நிலை, தனிச்சட்டங்கள் – என்கிறார் ரணில்

ranilசீனாவுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை விரிவாக்கிக் கொள்ளவதற்கு சிறிலங்கா எதிர்பார்த்திருப்பதாகவும், சிறிலங்காவில் முதலீடு செய்வதற்காக இன்னும் அதிகளவு சீன முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான மூன்று நாள் பயணத்தை இன்று ஆரம்பிக்கும் சிறிலங்கா பிரதமர், சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சீனாவுடன் நீண்டகால பொருளாதார, முதலீட்டு உறவுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தவுள்ளேன். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தும்.

இன்று சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக திகழ்கிறது.  சிறிலங்காவில் சீனா பல முதலீடுகளைச் செய்திருக்கிறது. கடன்களையும், கொடைகளையும் வழங்கியுள்ளது.

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை  அதிகரிப்பதும், இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்துக் கலந்துரையாடுவதும் தான் இந்தப் பயணத்தின் நோக்கம்.

சிறிலங்காவில் சீனாவின் தனியார் துறை முதலீடுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன். எதிர்கால கடன்கள் உள்ளிட்ட பொருளாதார விவகாரங்கள் குறித்தும், கலந்துரையாடப்படலாம் என்று நம்புகிறேன்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், தனித்துவமான நிதி மற்றும் வணிக மாவட்டம் என்ற சிறப்பு நிலை அளிக்கப்படும்.இதற்கென தனியான சட்டங்கள் இருக்கும். எனினும் இறுதியான முடிவை உயர்நீதிமன்றமே எடுக்கும்.

துறைமுக நகரத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு தனியான நிதி மற்றும் சட்ட முறை இருக்கும். இங்கு வந்து அனைத்துலக அளவில் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும்.

சிறிலங்காவின் இரண்டாவது பெரிய பொருளாதாரப் பிரதேசமாக அம்பாந்தோட்டையை மாற்றும் வகையில், பிரதான பொருளாதார வலயம் ஒன்றை அமைப்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்படும்.

மேல் மாகாண பெருநகர அபிவிருத்தி திட்டம் மற்றும் பொலன்னறுவவை அபிவிருத்தி செய்யும் திட்டங்களுக்கு உதவ சீனா முன்வந்துள்ளது.” என்றும் சிறிலங்கா பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *