வெடிபொருட்கள் தொடர்பாக எதையும் மறைக்கவில்லை – என்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டது தொடர்பாக எதையும் அரசாங்கம் மறைக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
அனுராதபுர- ரம்பேவவில் நேற்று சிவில் பாதுகாப்புப் படையின் ஆடைத் தொழிற்சாலையைத் திறந்து வைத்த பின்னர், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இதற்கு முன்னர் வடக்கில் பத்தாயிரம் ஆயுதங்கள் படையினராலும், காவல்துறையினராலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.அதுபற்றி யாரும் கேள்வி எழுப்பவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை.
உண்மையை மறைக்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. இப்போது ஊடகங்களுக்கு கவர்ச்சியான- சூடான தலைப்புகள் இல்லை. அதற்காக அரசாங்கம் வதந்திகளைப் பரப்பத் தயாராக இல்லை.
சம்பவங்கள் தொடர்பான எல்லாவற்றையும் வெளியிட முடியாது. நடந்து கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு அதனால் பாதிப்பு ஏற்படும்.
இதுவும் கூட தேசிய பாதுகாப்புக்கான நடவடிக்கை தான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.