கொழும்பு வந்த ஜப்பானியப் போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா கடற்படை போர்ப்பயிற்சி
ஜப்பானியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. யூடாச்சி, யூகிரி ஆகிய பெயர்களைக் கொண்ட ஜப்பானியப் போர்க்கப்பல்களே கொழும்பு வந்தன.
இந்தக் கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
ஜப்பானிய போர்க்கப்பல்கள் அணியின் கட்டளை அதிகாரியான கப்டன் தகாஷி இனோ, மற்றும் போர்க்கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கொமாண்டர் ரொமோவா பாபா, கொமாண்டர் ரொமோவுகி சாசே ஆகியோர் சிறிலங்காவின் மேற்குப் பிராந்திய கடற்படைத் தலைமையக கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜெயந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
நேற்று இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் சென்ற போது, சிறிலங்கா கடற்படையின் போர்க்கப்பல்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டன.