போருடன் தொடர்புடைய நீதிவிசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சிறிலங்கா அதிபர்
போருடன் தொடர்பான விசாரணைகளை அடுத்து நடத்தப்படும் உள்நாட்டு நீதிச் செயல்முறைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்குத் தான் இணங்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வாதுவவில் நேற்று நடந்த சட்ட கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நான் உள்நாட்டு நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். நீதித்துறையை வலுப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும், அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உணர்கிறேன்.
போருடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடத்தப்படும் உள்நாட்டு விசாரணைகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையின் பின்னர், நீதித்துறைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருந்தால், வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்காவுக்கு வருமாறு அழைப்பதற்கோ அல்லது அவர்கள் இதில் தலையீடு செய்வதற்கோ இணங்கமாட்டேன்.
உள்நாட்டு நீதித்துறை எந்த அரசியல் தலையீடுகளும் இன்றி சுதந்திரமாகச் செயற்படுவதற்கு எனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.