மைத்திரியின் கட்டளையை மீறிய 34 சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையின் உத்தரவையும் மீறி, மகிந்த ஆதரவு அணியினர் நடத்திய அரச எதிர்ப்புப் பேரணியில், அந்தக் கட்சியின் 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சித் தலைமையின் அனுமதியின்றி வேறு பேரணிகளில் பங்கேற்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பதவிகளை இழக்க நேரிடும் என்று கட்சியின் பொதுச்செயலர் துமிந்த சில்வா எச்சரித்திருந்தார்.
இந்த எச்சரிக்கையையும் மீறி, மகிந்த ஆதரவு அணியில் உள்ள பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய பேரணியில் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணி சார்பில் அங்கம் வகிக்கும், 51 உறுப்பினர்களில், 45 பேர் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
இவர்களில் 34 பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஏனையவர்கள் கூட்டணிக் கட்சிகளையும் சேர்ந்தவர்களாவர்.
நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, விதுர விக்கிரமநாயக்க, பிரசன்ன ரணவீர, ரொசான் ரணசிங்க ஆகியோர் வெளிநாடு சென்றிருப்பதாலும், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதேவேளை, நேற்றைய கூட்டத்தில் சோமவன்ச அமரசிங்க தவிர்ந்த புதியவர்கள் யாரும் மகிந்த அணியுடன் இணைந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.