ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சிறிலங்காவுக்கு அழைப்பு – ஜப்பான் செல்கிறார் மைத்திரி
ஜப்பானில் வரும் மே மாதம் நடக்கவுள்ள ஜி-7 எனப்படும், அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜி- 7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு, வரும் மே 26ஆம், 27 ஆம் நாள்களில், ஜப்பானில் நடைபெறவுள்ளது.
கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபருக்கு முதல்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஜி-7 மாநாட்டில் பங்கேற்க வரும் மே மாதம் ஜப்பான் செல்வார் என்று அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
இதனுடாக சிறிலங்காவுக்கு மேலும் பல வெளிநாட்டு உதவிகள், முதலீடுகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.