மேலும்

லசந்த, ரவிராஜ் படுகொலைகளின் பின்னணியில் மகிந்த, கோத்தா- பொன்சேகா தகவல்

lasantha_murderசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் உள்ளிட்டோரின் படுகொலைகளை மேற்கொண்ட குழுவினருக்குப் பின்னணியில், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச போன்றவர்களே இருந்தனர் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் சரத் பொன்சேகா.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

“லசந்த விக்கிரமதுங்க படுகொலை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டியது குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பு.

இந்த சம்பவம் இடம்பெற்ற போது, குற்றப்புலனாய்வுப் பிரிவு கோத்தாபய ராஜபக்சவின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது. அதனால் தான் இவ்வாறு நேர்ந்துள்ளது.

இது மட்டுமன்றி அந்தக் காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் அனைத்துமே மறைக்கப்பட்டு விட்டன. இப்போது இவற்றில் ஓரிரண்டு சம்பவங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்  ந.ரவிராஜ் படுகொலையில் சிறிலங்கா இராணுவம் சம்பந்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவருகின்றன.  இதில் அதிபர் பாதுகாப்புப் பிரிவு, அவர்களது வாகனம் போன்றவையும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இத்தகைய சம்பவங்கள் ஒரு குழுவினால் மேற்கொள்ளப்படுவதாக நானும் அப்போது அறிந்திருந்தேன். இதில் எமக்கு தொடர்பு இருக்கவில்லை. லசந்த எனக்கு எதிராகச் செயற்படவுமில்லை.

மகிந்த ராஜபக்சவுக்கும் அவருக்கும் பிரச்சினைகள் இருந்திருக்கலாம். இன்னும் சிலருக்கும் கோத்தாபயவுக்குமிடையில் பிரச்சினைகள் இருந்தன. ஒரு குழுவே இவற்றை செய்தன.

அந்தக் குழுவின் பின்னணியில் முன்னாள்அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச போன்றோர் செயற்பட்டுள்ளனர். இது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் மக்களுக்கு இந்த விடயத்தில் தெளிவில்லை.

இதனால்தான் இராணுவம் தொடர்புபட்டுள்ளது, இராணுவத் தளபதி தொடர்புபட்டுள்ளார் என்ற  வதந்திகள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மறைக்கப்பட மற்றொரு காரணமும் உள்ளது. அவரது சகோதரர் லால் விக்கிரமதுங்க மகிந்த ராஜபக்சவின் அடிவருடியாக செயற்பட்டதே இதற்குக் காரணம்.

சிலர் மகிந்த ராஜபக்சவின் அடிவருடிகளாக இருந்து கொண்டு எனக்கெதிராக சாட்சி சொன்னார்கள். இத்தகைய சூழலில் உண்மைகள் வெளிப்படுவது குறைவே” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *