சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு பான் கீ மூன் பாராட்டு
சிறிலங்கா போன்ற நாடுகளின் மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உதவியுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, நடந்த நிகழ்விலேயே ஐ.நா பொதுச்செயலர் இவ்வாறு கூறியுள்ளார்.
மனித உரிமைகள் விவகாரங்களில், கடந்த 10 ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முக்கியமான முன்னேற்றங்களை அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘கடந்த பத்தாண்டுகளாக மனித உரிமைகள் பொறிமுறைகள், வலுப்படுத்தப்பட்டுள்ளன.
புரூண்டி, கினியா, தென்சூடான், சிறிலங்கா, சிரியா உள்ளிட்ட பல நாடுகளில், மனித உரிமைகள் தொடர்பான அவசர நிலைமைகளின் போதும், பொறுப்புக்கூறலை நோக்கியும் செயற்பட, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பணிகள் அனைத்துலக சமூகத்துக்கு உதவியுள்ளது.” என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.