முப்படையினரின் பாதுகாப்பில் சிறிலங்காவின் மின்சார நிலையங்கள்
சிறிலங்காவின் அனைத்து மின்சார நிலைய கட்டமைப்புகள் மற்றும் உப மின்நிலையங்களிலும், சிறிலங்காவின் முப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணி தொடக்கம், சிறிலங்காவின் இராணுவம், கடற்படை, விமானப்படை என்பன, அனைத்து மின்சார சபை நிலையங்களிலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அனைத்து மின்சாரசபை நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.
பியகமவில் மின்மாற்றி ஒன்று வெடித்து, மின்சாரத் தடை ஏற்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும், 8 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.