இருதரப்பு பேச்சுக்களை அடுத்தே துறைமுக நகரத் திட்டத்துக்கு பச்சைக்கொடி – மலிக் சமரவிக்கிரம
வெற்றிகரமாக நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, சீன நிறுவனத்தின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்ததாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
“இந்த திட்டம் தொடர்பான முக்கியமான கரிசனைகள் குறித்து இருதரப்பும் கலந்துரையாடியிருந்தன. இதையடுத்து இருதரப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டது.
கடலில் இருந்து மீட்கப்படும் நிலத்தின் உரிமை தொடர்பான சதவீதம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அபிவிருத்தி மற்றும் நிலம் என்பன கூட்டு முயற்சியாகவே இருக்கும்.
அந்தப் பிரதேசத்தின் மீது விமானங்கள் பறக்கத் தடை இருக்கும் என்று சிலர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை.
சுற்றுச்சூழல் தொடர்பாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னரே, இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.