மேலும்

கொழும்புத் துறைமுகத்துக்கு புதிய நெருக்கடி – போட்டிக்களத்தில் சென்னை

colombo-harbourகப்பல்களுக்கு எரிபொருளை நிரப்பும் சேவை, சென்னைத் துறைமுகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடல் வழியாக பயணம் செய்யும் அனைத்துலக கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதற்காக இதுவரை கொழும்பு அல்லது சிங்கப்பூர் துறைமுகங்களுக்கே செல்ல வேண்டிய நிலை இருந்தது.

ஆனால், சென்னைத் துறைமுகத்தில் அனைத்துலக கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துறைமுகத்தில் இருந்து ஐந்து கடல் மைல் தொலைவில் வைத்து, கப்பல்களுக்கு மிதவைக் கலங்களின் மூலம் எரிபொருள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், அனைத்துலக கப்பல்களுக்கான புதிய வாய்ப்புகளை இந்தியா திறந்து விட்டுள்ளது.

சென்னைத் துறைமுகத்துக்குள் நுழையாமலேயே, எரிபொருளை நிரப்பும் வசதி கிடைத்துள்ளதால், கப்பல்களுக்கு செலவினங்கள் குறையும்.

துறைமுகத்துக்குள் நுழைவதற்காக செலுத்த வேண்டிய கப்பல்களுக்கு வழிகாட்டும், தரித்து நிற்கும், உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தாமலேயே எரிபொருளை நிரப்பும் வசதி கிடைக்கும் என்பதுடன் நேரமும் மிச்சமாகும்.

சென்னைத் துறைமுகத்தின் இந்த புதிய வசதிகள் கொழும்புத் துறைமுகத்தை நாடும், அனைத்துலக கப்பல்களைத் திசைதிருப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கொழும்புத் துறைமுகத்தின் வருவாயும், முக்கியத்துவமும் பாதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *