சீனாவிடம் புதிய கடன்களைக் கோரியுள்ளது சிறிலங்கா
சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் புதிய கடன்களைக் கோரியிருப்பதாக சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டங்களுக்கும், மத்தல அனைத்துலக விமான நிலையத்தை கூட்டுமுயற்சியாக அபிவிருத்தி செய்வதற்குமே சீனாவிடம் புதிய கடன்கள் கோரப்பட்டுள்ளன.
அண்மையில் சீனா சென்றிருந்த போது, சீனாவின் அபிவிருத்தி வங்கி, எக்சிம் வங்கிய ஆகியவற்றின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து இதுதொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியிருந்தேன்.
இந்தப் பேச்சுக்கள் பயனுள்ளதாக இருந்தன.பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி ஒத்துழைப்பு கோரப்பட்டது. அவர்கள் எமக்கு உதவத் தயாராக இருந்தார்கள்.
நாம் திட்டங்கள் தொடர்பான வரைவை கொண்டிருக்கிறோம். அவற்றுக்கான நிதி ஆதரவை சீனாவிடம் கேட்டிருக்கிறோம்.
ஆனால் இன்னமும் எதுவும் இறுதிப்படுத்தப்படவில்லை. இது அவர்களின் முன்னுரிமைப் பட்டியலில் இருக்கிறது.
அம்பாந்தோட்டை பொருளாதார வலயத்தில் சைனா மேர்ச்சன்ட்ஸ் நிறுவனம் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பாந்தோட்டை விமான துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றை கூட்டுமுயற்சியாக அபிவிருத்தி செய்யும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்தல விமான நிலையத்தை இயக்குவதற்கு, அதனை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவை சீனத் தரப்பு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.