மீனவர் அத்துமீறல் விவகாரம்- பேச்சுக்களை தன்னிச்சையாக பிற்போட்டது புதுடெல்லி்
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இந்த மாதம் நடத்தவிருந்த பேச்சுக்களை இந்திய அரசாங்கம் பிற்போட்டுள்ளது.
கடந்த மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சு நடத்த, புதுடெல்லி வருமாறு சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு, அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தமாதம், அமைச்சர் மகிந்த அமரவீர புதுடெல்லி சென்ற பேச்சு நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்திய அரசாங்கம் இந்தப் பேச்சுக்களை வரும் மே மாதம் வரை பிற்போட்டிருக்கிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான உயர்மட்டப் பேச்சுக்கள் வரும் மே மாதம் புதுடெல்லியில் நடக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனாலும், இந்தப் பேச்சுக்கள் பிற்போடப்பட்டது குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிகாரபூர்வமாக எந்த தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை.
தமிழ்நாட்டில், வரும் மே மாதம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில், மீனவர்கள் விவகாரமும் முக்கியமான பரப்புரை விடயமாக உள்ளது.
இந்த நிலையிலேயே, இதுதொடர்பான பேச்சுக்களை இந்திய அரசாங்கம் பிற்போட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.