மேலும்

அடுத்துவரும் மாதங்கள் சிறிலங்காவுக்கு முக்கியமானவை- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

zeid-colombo-press (1)அடுத்த சில மாதங்கள் சிறிலங்காவுக்கு முக்கியமானவையாக இருக்கும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வில் இன்று  ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

”பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நிலையான அமைதியை நோக்கி சிறிலங்கா சொந்தப் பயணத்தை மேற்கொள்கிறது.

அரசியலமைப்பை திருத்துவதற்கும், சுதந்திரமான அமைப்புகளை மீளவும் உருவாக்குவதற்கும்,சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும், விவாதிக்கும் சூழலை ஏற்படுத்துவதற்கும் முக்கியமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்கத்துக்கான சக்திவாய்ந்த அடையாளமாக, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதைக் கருத்திக்  கொள்ளலாம்.

இத்தகைய நகர்வுகள் இருந்தாலும், இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிப்பது, தடுப்புக்காவலில் உள்ளவர்களின் வழக்குகளை மீளாய்வு செய்வது, காணாமற்போயுள்ளவர்களின் விவகாரங்களுக்கு தீர்வு காண்பது போன்ற ஏனைய விடயங்களில், வேகமாக முன்னேற்றம் காணப்பட  வேண்டும்.

பேரவையின் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு விரிவான இடைக்கால நீதிச் செயல்முறைகளை  வரைவது தொடர்பான தேசிய கலந்துரையாடல்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளதால் அடுத்துவரும் மாதங்கள் முக்கியமானவையாக இருக்கும்.

கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் இல்லாத சூழலில் இது நடப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், அப்போது தான் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கேட்க முடியும்.

மீறல்கள் குறித்த அறிக்கைகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.

சிறிலங்காவின் முன்னேற்றங்கள் தொடர்பாக, பேரவையின் ஜூன் அமர்வில் அறிக்கையிடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *