யோசிதவுக்கு மார்ச் 24 வரை விளக்கமறியல் – பசிலுக்குப் பிணை
நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேரையும், எதிர்வரும் மார்ச் 24ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லெப்.யோசித ராஜபக்ச, ரொகான் வெலிவிட்ட, நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஐந்து பேரும் இன்று கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதே, அவர்களைத் தொடர்ந்தும் இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இவர்கள் ஐவரும், கடந்த ஜனவரி மாதம் 30ஆம் நாள் தொடக்கம், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடுவெல நீதிமன்றத்துக்கு இன்று வந்திருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, யோசித ராஜபக்சவைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் இறுக்கமான நிலையில் காணப்பட்டார்.
அதேவேளை, லெப்.யோசித ராஜபக்சவை பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு வரும் 14ஆம் நாள் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பசில் ராஜபக்சவை பிணையில் செல்ல கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்தார்.