பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மதிப்புக்கூட்டு வரியை 15 வீதமாக அதிகரிக்கத் திட்டம்
உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, மதிப்புக்கூட்டு வரியை (VAT) 15 வீதமாக அதிகரிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட சிறப்பு அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
”முன்னைய அரசாங்கத்தின் கடன்களால் நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க அனைத்துலக நாணய நிதியத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.
தற்போது 11 வீதமாக அறவிடப்படும் மதிப்புக்கூட்டு வரியை 15 வீதமாக அதிகரிப்பதும், வரி அறவீட்டு முறையின் குறைபாடுகளை களைவதும் தற்போதைய நிலையில் அவசியம்.
தொலைத்தொடர்பு சேவைகள், தனியார் கல்வி, சுகாதார சேவைகளுக்கான வரிச்சலுகைகள் நீக்கப்படும்.
அத்தியாவசியப் பொருட்களுக்கும் மின்சாரத்துக்கும் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படாது. தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களுக்கே இந்த வரி விதிக்கப்படும்.
முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால், சிறிலங்கன் விமான சேவை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன நட்டத்தில் இயங்ககின்றன.
அனைத்துலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள போதும், பெற்றோலியக் கூட்டுத் தாபனம் நட்டத்தில் இயங்குவதால், அதன் நன்மையை உள்ளூர் மக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடன்களை அடைப்பதற்காக மேலும் கடன் சுமைக்குள் சிக்கிக் கொள்ள முடியாது. அதனால் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க முயற்சிக்கிறோம்.
இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தக இணக்கப்பாடுகளை எற்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்த் முயற்சிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.