வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய சீனாவுக்கும் சிறிலங்கா அழைப்பு
சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்துலக முதலீடுகள் மற்றும் உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்காவின் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா, தகவல் வெளியிடுகையில்,
“போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் கொடையாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு ஜப்பானைத் தலைமையேற்குமாறு கோரப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ஜப்பான் சென்றிருந்த போது, இந்த கொடையாளர் மாநாட்டுக்கு தலைமை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவர்கள் இந்த மாநாட்டை ஒழுங்கு செய்கின்றனர். இந்த மாநாடு பெரும்பாலும் இந்த ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெறும்.
இந்த மாநாட்டில் வடக்கு கிழக்கிற்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் கோரப்படும்.
அபிவிருத்தி செய்ய வேண்டிய பிரதானமான இடங்களில் ஒன்றாக வடக்கு இருக்கிறது. இந்தப் பகுதியில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் பேச்சு நடத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய சீனாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.