தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற சிறிலங்காவிடம் அமைதியாக அழுத்தம் கொடுத்தாராம் சுஸ்மா
சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு, இலங்கைத் தீவின் சிறுபான்மையினரான தமிழ் மக்களின் அபிலாசைகளை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று புதுடெல்லி எதிர்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிறிலங்கா அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த தகவலை அமைதியான முறையில் சிறிலங்கா அரசாங்கத்திடம் பரிமாறியுள்ளதாக இந்தியாவில் இருந்து வெளியாகும் டெக்கான் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுபான்மை தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்தோ, அல்லது சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறைகள் குறித்தோ, கொழும்புக்கான தனது பயணத்தின் போது, சுஸ்மா சுவராஜ் பகிரங்கமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
கொழும்புடனான புதுடெல்லியின் புதிய அணுகுமுறைக்கு ஏற்ப, வெளிப்படையாக அவர் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட, செய்திக்குறிப்பில், நல்லிணக்கச் செயலி முறைகள் குறித்தோ, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்தோ எந்த விடயங்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
எனினும், தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாண அரசாங்கங்களுக்கு, அதிகாரப் பகிர்வை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் எடுத்துக் கூறியதாக புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.