இன்று காலை கொழும்பு வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – நாளை யாழ். பயணம்
சிறிலங்காவுக்கான நான்கு நாள் பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து ஆராயவுள்ளதுடன், யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார்.
நான்கு நாள் பயணமாக இன்று காலை கொழும்பு வரவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், வரும் 10ஆம் நாள் காலை வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார்.
இதன் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தாம் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதுடன், கடந்த ஒக்ரோபர் முதலாம் நாள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்தும் ஆராயவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மற்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் முப்படைகளின் தளபதிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளதுடன், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தேசிய மனித உரிமை ஆணைக்குழு, மற்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடனும் கலந்துரையாடவுள்ளார்.
நாளையும், நாளை மறுநாளும், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்குப் பயணம் மேற்கொள்ளும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர்கள், முதலமைச்சர்களையும் சந்திப்பார்.
அத்துடன் அங்குள்ள சிவில் சமூகத்தினர் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார்.
மேலும், பல்வேறு இடங்களிலும் மதத் தலைவர்களையும் சந்தித்துப் பேச ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், திட்டமிட்டுள்ளார்.