தமிழில் தேசிய கீதம் பாடியதால் வடக்கு முதல்வர் நாக விகாரையில் வழிபாடு
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் உள்ள நாக விகாரைக்குச் சென்று நேற்று வழிபாடு நடத்தினார்.
நேற்றுமுன்தினம் நடந்த சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதையடுத்தே, அவர் நாக விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
”சிறிலங்காவின் 68ஆவது சுதந்திரநாள் நேற்று முன்தினம் கொழும்பில் கொண்டாடப்பட்டபோது தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டிருந்தது.
இது சிறிய விடயமாக இருந்தாலும் தமிழ் மக்களை பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சியான அவர்களுக்கு பிடித்தமான விடயமாகும்.
இத்தகைய செயற்பாடு என்னையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை எடுத்து காட்டும் விதமாகவே நாக விகாரைக்கு வந்து புத்தபெருமானை வழிபாடு செய்தேன்.
நாகவிகாரைக்குச் சென்று புத்த பெருமானை வழிபட வேண்டும் என பலமுறை முயற்சித்திருந்த போதும் ஏதோவொரு காரணங்களால் அது நடைபெறாமலே தடைப்பட்டிருந்தது.
எனினும் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்று ரத்து செய்யப்பட்டதால் எனக்கு வழிபட வாய்ப்புக் கிடைத்திருந்தது.
நாட்டில் புதியதொரு யுகம் பிறந்து சமாதானம் நிலவ வேண்டும் என நான் புத்தபெருமானிடம் வேண்டிக்கொண்டேன்.
தமிழர்களை நோக்கி சிங்கள மக்கள் ஒரு அடி முன்னே வைத்தால், சிங்கள மக்களை நோக்கி தமிழ் மக்கள், 10 அடி முன்னே வைப்பார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.