மேலும்

அதிபர் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் அதிகரிப்பு

ltte-ban-gazetteபாரிய நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், அதிபர் ஆணைக்குழுவுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் நாள் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இந்த ஆணைக்குழுவின் அதிகாரங்களை பலப்படுத்துவதற்காக, ஐந்து பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரிடம் உள்ள நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டு இந்த ஆணைக்குழுவின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து பேர் கொண்ட குழு இதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளது.

இந்த ஆணைக்குழு உறுப்பினர்களாக மேல் நீதிமன்ற நீதிபதிகளான மென்டிஸ் செனவிரத்ன, குலதுங்க கிஹான் ஹிமான்சூ, ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் பி.ஏ. பிரேமதிலக மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி விகும் அதுல களுஆராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாரிய ஊழல் மோசடி, அரச சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் ஆராய 2015 மார்ச் மாதம் சிறிலங்கா அதிபரால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஏதேனும், விசாரணைகளை முன்னெடுக்கையில் குறித்த நபரினதும் மட்டுமன்றி அவரது மனைவி, பிள்ளைகள் ஆகியோரின் வங்கிக்கணக்குகள், ஆவணங்கள் என்பவற்றை வழங்குமாறு வங்கி முகாமையாளர்கள் மற்றும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஆகியோருக்கும் வர்த்தமானி ஊடாக பணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *