மேலும்

ஐ.நா குழுவுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க தடை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட வேண்டாம் என்று, காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களிடம் ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது.

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் அதிகாரிகள், நேற்று மாலை காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களுடன் கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தில் கலந்துரையாடியிருந்தனர்.

இந்தச் சந்திப்பில், காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவும் கலந்து கொண்டார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் சந்திப்புத் தொடர்பான கருத்துகள் எதையும் தெரிவிக்க மறுத்துள்ளார்.

சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும், பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவினர், அடுத்த வாரம், ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்துவார்கள் என்றும் ஐ.நா அதிகாரிகள் தம்மிடம் கூறிய அவர் தெரிவித்தார்.

வரும் 18ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும், பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவினர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கும் சென்று காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களுடன் பேச்சு நடத்தவுள்ளது.

அதேவேளை, இந்தக் குழுவின் சிறிலங்கா வருகை அனைத்துலக தலையீட்டின் ஒரு கட்டம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *